Tamilnadu

வரதட்சணைக் கொடுமை : மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நாடகமாடிய ராணுவ வீரர் - திருவண்ணாமலை பயங்கரம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 3-வது மகள் ரேணுகாவுக்கும், போளூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரனுக்கும், கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

நாகேந்திரன் ராணுவத்தில் பணிபுரிவதால் இவர்கள் குஜராத்தில் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு யோகி ஸ்ரீ, தான்யா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி தீபாவளியன்று வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து ரேணுகாவிற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஏழுமலைக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை தனது குடும்பத்தினருடன் குஜராத் சென்று, சிகிச்சை அளிப்பட்ட மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது ரேணுகா பலத்த தீக்காயத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகக் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் குடும்ப பிரச்சனைக் காரணமாக ரேணுகா தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டதாக நாகேந்திரன் ரேணுகாவின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உடலைப் பிரேத பரிசோதைக்கு முடிந்த பிறகு திருவண்ணாமலையில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு வந்து சடங்கு செய்து புதைத்தனர்.

ரேணுகா - நாகேந்திரன்

இதற்கிடையில், ரேணுகாவின் மூத்த மகள் யோகா அம்மா மீது நாகேந்திரன்தான் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாக, அழுது கொண்டே கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஏழுமலை குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் மகளைக் கொன்ற மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஏழுமலை தனது பேத்தி யோகாவையும் அழைத்து வந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

மேலும் அந்த புகார் மனுவில், “வரதட்சணை கேட்டு தனது மகளை நாகேந்திரன் கொன்று விட்டதாகவும், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உரிய விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி வனிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார். ராணுவத்தில் பணி புரியும் ஒருவரே வரதட்சணைக்கேட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.