Tamilnadu

“கலெக்டரய்யா... எங்கள காப்பாத்துங்க...” - திருநங்கையை திருமணம் செய்தவர் கதறல்!

மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார்.

இந்நிலையில் மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் திருநங்கை கல்கி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நேற்று மதுரை பூங்கா முருகன் கோவிலில் முறைப்படி செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு இருவரின் குடும்பங்களில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத்தொடர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பஷீர் மற்றும் கல்கி இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

இதுதொடர்பாக பஷீர் கூறுகையில், “எங்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். நானும், கல்கியும் இணைந்து வாழ்வோம். கடைசிவரை கல்கியை கைவிட மாட்டேன்” என்றார்.