Tamilnadu

150 ரூபாய் கட்டணம் வசூலித்த ரோகிணி தியேட்டருக்கு 100 மடங்கு அபராதம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதிலும் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கான ரோகிணி தியேட்டர் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில் முன்னணி வகிக்கிறது.

அப்படி இருக்கையில், அதிக கட்டணம் வசூலிப்பதாக ரோகிணி திரையரங்க நிர்வாகம் மீது தேவராஜ் என்ற வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், “ரோகிணி திரையரங்கில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கடந்த ஜூலை 11ம் தேதி ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தேன். அதற்கு கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவு கட்டணமாக ரூ.35.45 பைசா என 185 ரூபாய் 40 பைசா வசூலிக்கப்பட்டது. ஆனால் அரசோ, குறைந்தபட்சம் 40 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே ரோகிணி திரையரங்கத்துக்கு கட்டணமாக வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

ரோகிணி திரையரங்கின் கட்டண கொள்ளையால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் இழப்பீடு வழங்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தார் தேவராஜ்.

இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி லட்சுமிகாந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கட்டண கொள்ளையால் பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க ரோகிணி திரையரங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

கட்டணமாக வசூலிக்கப்பட்ட 150 ரூபாயை விட 100 மடங்கு அதிகமாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் கட்டண கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் டிக்கெட் விலையைக் குறைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.