Tamilnadu

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்? - ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் எனக் குறிப்பிடாத நிலையில், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழ் வழியில் கல்வி பயின்ற மதுரையைச் சேர்ந்த தயனா உட்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்காத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.

இதைனையடுத்து, கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக செப்டம்பர் 6ம் தேதி விளக்கமளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.