Tamilnadu

மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மூடல் : பட்டாசு வெடித்துக் கொண்டாடிய கிராம மக்கள்!

தமிழகம் எங்கும் ஆங்காங்கே பெண்கள் அரசு மதுபானக் கடைக்கு எதிராக பல்வேறு வகையிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசோ மக்களின் போராட்டங்களுக்கு செவிமடுக்காமல் அவர்களை மேலும் மேலும் அடக்கியும், ஒடுக்கியும் வைத்து, டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள மங்கைமடம் கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு அதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டியுள்ளனர்.

மங்கைமடம் கிராமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் இந்த டாஸ்மாக் கடையை தினந்தோறும் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களை திரட்டி இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், மங்கைமடம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த அரசு மதுபான கடையை மூட உத்தரவிட்டார். இதனையடுத்து டாஸ்மாக் கடையை மூடியதை அறிந்த கிராமத்தினர், அந்தக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.