Sports

வெள்ளக்காடான மைதானம்... 12 மணி நேரத்தில் தொடங்கிய போட்டி - தமிழ்நாட்டை பாராட்டிய இந்திய வீரர் !

2024-25 ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள SNR கல்லூரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா ஆகிய அணிகள் மோதிய ரஞ்சிக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் மூன்றாம் நாளின்போது அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மைதானம் முழுக்க வெள்ளத்தால் மூழ்கிய நிலையில், இந்த போட்டியை மேலும் தொடரமுடியாத நிலை ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் மைதானத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த வடிகால் அமைப்பால் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மைதான ஊழியர்களின் சிறப்பான செயல்பட்டால் 4- நாள் ஆட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இதில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில், மைதான ஊழியர்களை பாராட்டி இந்திய அணி வீரரும், சவுராஷ்டிரா அணி கேப்டனுமான ஜெய்தேவ் உனத்கட் தனது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு கிரிக்கெட்டுக்கான சிறந்த கட்டமைப்புகளை கொண்டுள்ளது. அதனால்தான் தமிழ்நாடு சிறந்த வீரர்களை எப்போதும் உருவாக்கி வருகிறது. இந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்று இருந்தாலும் 3-வது நாள் மாலையில் பலத்த மழை பெய்தது.

ஆனால் வது நாள் காலை மைதானத்தில் தேங்கிய நீர் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு கிரிக்கெட் சங்கமும் இதிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

Also Read: 2 வருடத்தில் அரைசதம் கூட அடிக்காத சோகம்... பாபர் அசாமை அணியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்... காரணம் என்ன?