Sports

இந்தியாவுக்கு ரூ.5,963 கோடி... பாகிஸ்தானுக்கோ வெறும் ரூ.65 கோடி : பரிதாப நிலையில் பாகிஸ்தான் !

ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், 90களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின்னர் இந்திய ரசிகர்களின் கவனம் கிரிக்கெட்டை நோக்கி திரும்பியது.

இதனால் இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய சக்தியாக மாறத்தொடங்கியது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்ததால் இந்தியாவில் கிரிக்கெட் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டத் தொடங்கியது. மேலும், ஐசிசி-க்கு வருமானத்தை அள்ளித் தரும் நாடாகவும் வளர்ச்சி அடைந்தது.

தற்போது இந்திய அணி 2023-28-ம் ஆண்டுகளில் விளையாடும் போட்டிகளூக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் மற்றும் தொலைக்காட்சி உரிமம் ரூ.5,963 கோடிக்கு வயாகாம் 18 நிறுவனத்துகு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சமமாகப் பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடுமையாக தடுமாறி வரும் நிலையில், அந்த அணி விளையாடும் போட்டிகளுக்கான தொலைக்காட்சி உரிமத்தை வாங்க பெரியளவில் எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆடும் 2024 முதல் 2026 வரையிலான மூன்று ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்திய மதிப்பில் 175 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஸ்போர்ட்ஸ் ஃபைவ் நிறுவனம் அதிகபட்சமாக 65 கோடிக்கு மட்டுமே அதனை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வாரியம் அதனை மறுத்துள்ள நிலையில், பிற நிறுவனங்கள் அதை விட குறைவான தொகைக்கே வாங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி ஸ்போர்ட்ஸ் ஃபைவ் நிறுவனத்துக்கே ஒளிபரப்பு உரிமம் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஆயுத புரட்சி To தேர்தல் அரசியல் : இலங்கையின் முதல் கம்யூனிச அதிபர் மற்றும் அவரின் கட்சியின் பின்னணி என்ன?