Sports

”தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடரட்டும்” : பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பதக்கங்களை பெற்று வருகின்றனர்.அந்தவகையில், பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் இதே பிரிவில், இந்தியாவின் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ரியோ, டோக்கியோவை தொடர்ந்து பாரீஸ் பாரா ஒலிம்பிக்கிலும் மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "3-வது முறையாகப் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பாரிஸ் பாராலிம்பிக் : 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்... விவரம் என்ன ?