Sports

24 வயதிலேயே ஓய்வை அறிவித்த ஒலிம்பிக்கில் பங்குபெற்ற இளம் இந்திய வீராங்கனை : ரசிகர்கள் அதிர்ச்சி !

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொண்டனர். அதே போல இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த ஒலிம்பிக் தொடரில் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தை பிடித்தது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முக்கிய வீரர்கள் தோல்வியை தழுவினர்.

அந்த வகையில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா ஒரு பதக்கத்தையாவது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் போனாலும், மகளிர் அணி பிரிவில் இந்திய அணி காலிறுதி வரை முன்னேறி பலம் வாய்ந்த ஜெர்மனி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

மகளிர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதாகும் அர்ச்சனா கமாத்தின் விளையாட்டு பெரிதும் பேசப்பட்ட நிலையில், தற்போது அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் காலத்தில் சிறந்த வீராங்கனையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் இளம் வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்ச்சனா கமாத்தின் பயிற்சியாளர், "அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பது அதிர்ச்சிகரமானது என்றாலும் அவரின் நிலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டேபிள் டென்னிஸ் விளையாட்டில் எதிர்காலம் இல்லை என கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளார்"என்று கூறியுள்ளார்.

Also Read: "மோடி அடுத்த ஆண்டு ராஜினாமா செய்யாவிட்டால், தனது நாற்காலியை இழப்பார்" - பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி!