Sports

"ஒலிம்பிக்கில் பங்கேற்ற எனக்கு ஒன்றிய அரசு எந்த நிதியுதவியும் செய்யவில்லை" - வதந்திக்கு வீராங்கனை பதில் !

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்ற நிலையில் இரட்டை இலக்க பதக்கங்களை இந்தியா வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தையே பிடித்து விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு இந்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுக்காக அரசு இந்த அளவு செலவு செய்தும், அவர்கள் பதக்கம் வெல்லவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்ற என்ன ஒன்றிய அரசு சார்பில் எந்த நிதியுதவியும் செய்யப்படவில்லை என பாட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற அஸ்வினி பொன்னப்பாவுக்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "நான் கலந்துகொண்ட போட்டிகளுக்கு எனக்கு யாரும் நிதியுதவி செய்யவில்லை. என்னுடைய பயிற்சியாளருக்கும் நான்தான் பணம் கொடுக்கிறேன். எனக்கு ஒன்றிய அரசு சார்பில் எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இது குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் தொடருக்கு எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைகூட நிராகரிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.

Also Read: பல முறை மன்னிப்பு கேட்டும் திருந்தாத பாபா ராம்தேவ் - அலோபதி மருத்துவத்துக்கு எதிராக மீண்டும் அவதூறு !