Sports

"பெண்ணாகப் பிறந்தேன், பெண்ணாகவே வாழ்கிறேன்"- பாலின சர்ச்சை குறித்து இமானே கெலிஃப் பதில் !

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் ரவுண்ட ஆப் 16 சுற்று போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர். இந்த போட்டியின் 46வது நொடியிலேயே இமானே கெலிஃப்பின் தாக்குதலால் ஏஞ்சலா கரினியின் மூக்கில் இரத்தம் வழிந்தது. இதனால் ஏஞ்சலா கரினி போட்டியை பாதியிலேயே நிறுத்தினார்.

மேலும் இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண்தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் பேட்டியளிக்க அவரின் குற்றச்சாட்டு இணையத்தில் வைரலானது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இமானே கெலிஃப் உடம்பில் ஆண்தன்மை அதிகமிருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக மருத்துவப்பரிசோதனை இமானே கெலிஃப்க்கு சாதகமாக வர, அவர் இந்த தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைத்தளத்தில் பலரும் இமானே கெலிஃப்பை மோசமாக விமர்சித்தனர். எனினும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி இமானே கெலிஃப்புக்கு ஆதரவாக ஆதாரங்களுடன் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீதான விமர்சனம் குறைந்தது.

அவருக்கு எதிராக விமர்சனத்தை முன்வைத்த ஏஞ்சலா கரினியும் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மீண்டும் அவரை சந்தித்தால் இமானே கெலிஃப்பை கட்டி தழுவுவேன் என்றும் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இமானே கெலிஃப் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங்க் லியூசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து தன் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், "எல்லாப் பெண்களைப் போல நானும் பெண்ணாகப் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன். ஆனால் எனது வெற்றியைப் ஜீரணித்துக் கொள்ள சிலரால் முடியவில்லை. இந்த தங்கப்பதக்கம் தான் எனக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட தீவிர பிரச்சாரங்களுக்கான பதில்.

8 ஆண்டுகளாக இந்தக் கனவு என்னிடமிருந்தது. இதற்காக 8 ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன். இப்போது நான் ஒலிம்பிக் சாம்பியன். தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். எனது உழைப்புக்கு லன் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். எனது அல்ஜீரிய மக்களுக்கு நன்றி. பாரிஸுக்கு நன்றி"என்று கூறியுள்ளார்.

Also Read: SEBI தலைவரும் அதானியின் பங்குதாரர் தான்! : Hindenburg வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!