Sports

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்திய அணி பங்கேற்க BCCI மறுப்பு... இந்திய அரசு காரணமா ?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்வெளியாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த முறையும் பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ சார்பில் ஐசிசி யிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு ஐசிசி ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், இந்த தொடரில் இந்தியாவுக்கு பதில் தொடருக்கு தகுதி பெறாத இலங்கை இந்த தொடரில் பங்கேற்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் - உச்சநீதிமன்றம் உத்தரவு !