Sports

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வரவேற்பு : திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்... ஸ்தம்பித்த மும்பை !

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முன்னேறின. வலுவான இரண்டு அணிகள் மோதிய போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது . பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடியது. இறுதி கட்டத்தில் அந்த அணிக்கு 30 பந்துகளில் 30 ரன்களே வெற்றிக்கு தேவை பட்டது.

ஆனால் அங்கிருந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் இன்று இந்தியா திரும்பினர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மும்பையில் 2 கிலோ மீட்டருக்கு வெற்றிகொண்டாட்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இந்திய அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

4 மணிக்கு வான்கடே மைதானத்தில் பி.சி.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது என்று கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் வெள்ளத்தில் வீரர்கள் வந்த பேருந்து சிக்கிக்கொண்டதால் வான்கடே மைதானத்துக்கு வீரர்கள் வர தாமதம் ஆனது. கடற்கரையை ஒட்டிய மரைன் டிரைவ் பகுதிகள் ரசிகர்கள் வெகுவாக திரண்டு கடல் அலைபோல் காட்சியளித்த நிலையில், இந்த வெற்றிகொண்டாட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: "இதுதான் எனது கடைசி யூரோ கோப்பை தொடர்" - ஓய்வு முடிவு குறித்து அறிவித்தார் ரொனால்டோ !