Sports

"தடுமாறிய எனக்கு உதவியர் தினேஷ் கார்த்திக்தான், அவர் அற்புதமான பேட்ஸ்மேன்" - விராட் கோலி நெகிழ்ச்சி !

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த 2022-ம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.பின்னர் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒருவனாக போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இவரின் இந்த ஆட்டத்தின் மூலம் ஊக்கம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

எனினும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்தை வலம்வந்து ரசிகர்களின் பிரியாவிடையை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு தினேஷ் கார்த்திக்தான் உதவி செய்தார் என விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நான் முதன்முதலில் தினேஷ் கார்த்திக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பில் அவரை குழப்பமான மனிதர் என நினைத்தேன்.

உண்மையாக அவர் அற்புதமான பேட்ஸ்மேன். அவரின் சிறப்பான திறமை இன்னமும் அப்படியே உள்ளது. களத்துக்கு வெளியே தினேஷ் கார்த்திக் உடன் சில சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியுள்ளேன். கிரிக்கெட் மட்டுமல்ல, அவற்றை தாண்டி பல விஷயங்களை குறித்து அபார அறிவு மிக்கவர் அவர்.

2022-ம் ஆண்டு தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு ஒவ்வொரு விஷயங்களையும் அவர் எப்படி அணுகுகிறார் என்பதை நேர்மையாக எனக்கு விளக்கினார். அது எனக்கு பெரும் உதவிகரமாக இருந்தது. அவரது நேர்மை மற்றும் தைரியமும் தான் தினேஷ் கார்த்திக்கிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே அவரை நேசிக்க வைத்தது. அதனால்தான் நாங்கள் நன்றாகப் பழகுகிறோம்"என்று கூறியுள்ளார்.

Also Read: ரூ.1 கோடிக்கு விற்கப்படும் டிக்கெட் : INDvs PAK போட்டிக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு : சர்ச்சையில் ICC !