Sports

ரூ.1 கோடிக்கு விற்கப்படும் டிக்கெட் : INDvs PAK போட்டிக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு : சர்ச்சையில் ICC !

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறுகிறது. இண்டிகா உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்கின்றன.

ஜூன் 1ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் விளையாடவுள்ளது. ஜூன் 5ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நியூயார்க் நகரில் வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நியூயார்க் நகரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் 1 கோடி ரூபாய் வரை விற்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த போட்டிகளுக்கான டையமண்ட் கிளப்பிற்கான டிக்கெட்டுகள் குறைந்தபட்சம் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் டையமண்ட் கிளப்பிற்கான டிக்கெட்டுகளை 20,000 டாலருக்கு (ரூ.15 லட்சம்) விற்பனை செய்வது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இந்த போட்டிகள் நடத்தப்படுவது விளையாட்டை விரிவுபடுத்தவும், ரசிகர்களை திரட்டுவதற்காகவுமே! வசூலில் லாபம் ஈட்டுவதற்காக அல்ல என்றும் ஐசிசி அமைப்பை அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை 300 முதல் 10,000 டாலர் வரை நிர்ணயம் செய்துள்ள ஐசிசி அமைப்பை பலரும் விமர்சித்து வருகின்ற்னர்.

Also Read: முடிவுக்கு வந்த சகாப்தம் : ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக் !