Sports

"அவர் அடுத்த சீசனுக்கும் வருவார், வந்து விளையாடுவார்" - தோனியின் ஓய்வு குறித்து CSK CEO கூறியது என்ன ?

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். அவர் இந்த ஆண்டோடு தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டதால் அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். ஆனால் தோனி தனது ஓய்வு முடிவு குறித்து இன்னும் அறிவிக்காததால் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா ? இல்லையா ? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், தோனி அடுத்த சீசனுக்கும் வருவார், வந்து விளையாடுவார் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என CSK அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " தோனியின் ஓய்வைப் பற்றி பலரும் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு தோனி மட்டும்தான் பதில் சொல்ல முடியும்.

தோனி எடுக்கும் முடிவுகளை நாங்கள் எப்போதும் மதித்திருக்கிறோம். எல்லாவற்றையும் அவரிடமே விட்டுவிடுவோம். ஓய்வு விஷயத்திலும் அவர் முடிவெடுத்த பிறகுதான் எதுவும் தெரியவரும். எங்களுக்கு அவர் அடுத்த சீசனுக்கும் வருவார், வந்து விளையாடுவார் என பெரிய நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Also Read: முடிவுக்கு வந்த சகாப்தம் : ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக் !