Sports

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நிரந்தரமானதா ? - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் பதில் என்ன ?

உலகளவில் பிரபலமான விளையாட்டு தொடர்களில் ஒன்று ஐபிஎல். அதிலும் கிரிக்கெட் என்றாலே ஐபிஎல் என்று சொல்லும் அளவு சர்வதேச தொடர்களுக்கு இணையான வரவேற்பை உலகளவில் ஐபிஎல் தொடர் பெற்றுவருகிறது. இந்த தொடரில் ஆட சர்வதேச நட்சத்திர வீரர்கள் அனைவரும் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த ஐபிஎல் தொடரில் ரன் மழை குவிந்து வருகிறது. 30-க்கும் அதிகமான முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ள நிலையில், 6 முறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவு ரன்கள் குவிக்கப்பட்ட மைதானத்தை தாண்டி இம்பாக்ட் பிளேயர் விதிமுறை காரணமாக கூறப்படுகிறது. இந்த விதிமுறை காரணமாக கூடுதலாக ஒரு வீரரை சேர்த்துக்கொள்ளலாம் என்பதால் பேட்டிங் ஆடும் அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கக்கூடும் என்பதால் ஆரம்பகட்ட வீரர்கள் தைரியமாக அட்டாக்கிங் கிரிக்கெட்டினை ஆடுகின்றனர்.

எனினும், இந்த விதிமுறையால் ஆல் ரௌண்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது என ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரும் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நிரந்தரமானது அல்ல என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " இம்பாக்ட் பிளேயர் விதிமுறை சோதனை முயற்சி மட்டுமே . இதனால் கூடுதலாக இரண்டு இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வாய்ப்பு பெறுகிறார்கள். எனினும் இது நிரந்தரமானது அல்ல. ஆனால், இது உடனடியாக நீக்கப்படும் என்றும் நான் கூறவில்லை.

நாங்கள் வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஒளிப்பரப்பாளர்களிடம் கலந்தாலோசித்து இதனை தொடரலாமா என்பது குறித்து முடிவெடுப்போம். யாரும் இது சரியில்லை என்று கூறினால் நாங்கள் அவர்களுடன் நிச்சயம் பேசுவோம். ஆனால் இதுவரை யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, இருப்பினும் உலகக் கோப்பைக்குப் பிறகு இதுகுறித்து பேசி முடிவு எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.

Also Read: 20 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியை அதிரவைத்த தொண்டர்கள்!