Sports

"எதுவும் என் கையில் இல்லை" - இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து நடராஜன் பேசியது என்ன ?

தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு நடை ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது என்னை பாதிக்கவில்லை என நடராஜன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் பரீசிலிக்கப்படும் வீரர்களின் பட்டியலில் என் பெயர் இருந்ததே பெரிய விஷயம். இந்திய அணியில் இடம்பெறுவதும் பெறாததும் என் கையில் இல்லை. அதே போல உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது என்னை பாதிக்கவில்லை. என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நமக்கு நடக்கும் என நான் எப்போதும் நம்புவேன்"என்று கூறியுள்ளார்.

Also Read: இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்திய அமெரிக்கா : காசா மீதான தாக்குதலை கண்டித்து அறிவிப்பு !