Sports

T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : வாய்ப்பை பெற்ற, இழந்த வீரர்கள் யார் யார் ?

அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடும் திறனை வைத்து இந்திய அணி தேர்வு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் என்பது அகமதாபாத்-ல் நடைபெற்றது. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு குழுவினர் ஆலோசனை செய்தனர்.

ஏற்கனவே, உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து,இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான 15பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் ஜெய்ஸ்வால்,விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், விபத்தில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அமெரிக்கா புறப்பட உள்ளனர்.

ரோஹித் சர்மா உடன் சேர்ந்து விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறாரா அல்லது ஜெய்ஸ்வால் களமிறங்குவாரா என்பது சூழலுக்கு ஏற்ப மாறுபடும். விக்கெட் கீப்பிங் இடத்திற்கு ரிஷப் பண்ட் பிரதான வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், சஞ்சு சாம்சனின் தொடர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரும் அணியில் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் உள்ள ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்மன் கில், ரிங்குசிங், கலீக் அகமது, அவிஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வெட்டரன் வீரர்களாக அணியில் உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இது கடைசி உலகக்கோப்பை டி20 தொடர் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆகையால், எதிர்கால இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பும் எழுந்துள்ளதால், இளம் வீரர்கள் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரம் நடராஜன், ரிங்கு சிங், கே.எல்.ராகுல் போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!