Sports

"ரிஷப் பண்ட் நாம் முன்னர் பார்த்த நபராக இனி இருக்கப் போவதில்லை" - சுனில் கவாஸ்கர் கருத்து !

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.

இதனிடையே தற்போது காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்று வருகிறார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என அவர் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறினார். மேலும், ஐபிஎல் விளம்பரத்துக்கான படப்பிடிப்பு தளத்துக்கும் ரிஷப் பண்ட் வருகை தந்தார் என புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில் , இதற்கு முன்பாக நாம் பார்த்த ரிஷப் பண்ட்டாக அவர் இருக்கப் போவதில்லை என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன் இருந்தால் அவருக்குக் கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பை கொடுக்கலாம். அவர் மிகசிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடுவதால், அவர் பின்னடைவை சந்திக்கும் எந்த விஷயத்தையும் நாம் செய்துவிடக் கூடாது.

இதற்கு பின்னர் நாம் இதற்கு முன்பாக பார்த்த ரிஷப் பண்ட்டாக அவர் இருக்கப் போவதில்லை. அவர் மீண்டு தன்னுடைய ஃபார்முக்கு திரும்ப கடுமையாக போராட இருக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர் பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் என்பதே மகிழ்ச்சியான செய்திதான்” எனக் கூறியுள்ளார்.