Sports

"அவர் இளம்வீரர், அவருக்கு இன்னும் சிறிது காலம் கொடுக்கவேண்டும்" - ராகுல் டிராவிட் கருத்து !

சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும் சமீப காலமாக அவர் ரன்களை குவிக்க தடுமாறி குறைவான ரன்களில் ஆட்டமிழந்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுப்மான் கில்லுக்கு நாம் சிறிது காலம் கொடுக்கவேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பு குறித்து ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " அவர் ஒரு சிறந்த வீரர், அவர் இப்போதுதான் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இருப்பதால், அவருக்கு நாம் சில காலம் கொடுக்க வேண்டும்.

கீழ் ஆரம்ப நாட்களில் ஆஸ்திரேலியா போன்ற இடத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். கடைசி இரண்டு டெஸ்டில் கடினமான ஆடுகளத்தில் அவர் பேட்டிங் செய்தார். அவர் தற்போது கடுமையாக உழைக்கிறார். நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் சில பெரிய ஆட்டங்களை விளையாடுவார்" என்று கூறியுள்ளார்.

Also Read: 4 ஆண்டுக்கான விருதுகளை ஒரே நாளில் வழங்கிய பிசிசிஐ : விருது வென்ற வீரர், வீராங்கனைகள் யார் யார் ?