Sports

தோல்வியின் பிடியில் இந்திய A அணி : டிராவிட் பாணியில் நங்கூரமாக நின்று அணியை மீட்ட சாய் சுதர்சன் !

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார்.

தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்ய அங்கும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். தொடர் சிறப்பாக ஆட்டம் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

இந்த நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்த இந்திய ஏ அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சாய் சுதர்சன் மீட்டுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணியும், இந்தியா ஏ அணியும் மோதிய போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 553 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இந்தியா ஏ அணி, 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரஜத் படிதார் மட்டும் 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தோல்வியின் பிடியில் ஆடிய இந்திய ஏ அணிக்கு சாய் சுதர்சன் ஒரு முனையில் அபாரமாக ஆடினார். 208 பந்துகளை சந்தித்த சாய் சுதர்சன் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இறுதியில் ஸ்ரீகர் பரத் 116 ரன்கள் குவிக்க இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்தது.

Also Read: 10.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்த IPL மதிப்பு : முதலிடத்தில் இருக்கும் ஐபிஎல் அணி எது ? வெளியான அறிக்கை !