Sports

12 வயதிலேயே ரஞ்சி கோப்பையில் அறிமுகம் : சச்சின், யுவராஜ் சாதனையை தகர்த்தெறிந்த பீகார் சிறுவன் !

இந்தியாவில் நடக்கும் முதல் தர கிரிக்கெட் ஆட்டத்தில் முதன்மையானது ரஞ்சி கோப்பை. இந்தியா முழுவதும் உள்ள 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பையின் இந்த ஆண்டுக்கான சீசன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.

இந்த தொடரில் பீகார் - மும்பை அணிகள் மோதிய போட்டி பீகாரின் பட்ரா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 12 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்பவர் பீகார் அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இளம்வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் ஆகியோர் தங்கள் 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். பீகார் - மும்பை அணிகள் மோதிய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி முதல் இன்னிங்சில் 19 ரன்களும், இரண்டாம் இன்னிங்சில் 12 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் பீகார் அணி, இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் தோல்வியைத் தழுவினாலும், பீகார் சார்பில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரண்டை இலக்கை எட்டிய ஒரே வீரராக 12 வயதான வைபவ் சூர்யவன்ஷி திகழ்ந்துள்ளார்.

வைபவ் கடந்த ஆண்டு இந்தியா B U19 அணிக்காக அறிமுகமாகி அதில் சிறப்பாக செயல்பட்டார். இந்த தொடரின் ஆறு இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்கள் உட்பட 177 ரன்களை அவர் குவித்தார். மேலும், சமீபத்தில் முடிவடைந்த வினு மன்கட் தொடரில், ஐந்து போட்டிகளில் 78.60 சராசரியுடன் 393 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்தே பீகார் ரஞ்சி அணிக்கு அழைக்கப்பட்ட அவர், முதல் போட்டியிலேயே ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

Also Read: கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த அண்ணாமலை: விரட்டியடித்த இளைஞர்கள், பொதுமக்கள் - நடந்தது என்ன ?