Sports

வரும் IPL தொடரில் ஆடுவீர்களா ? - செய்தியாளர்கள் கேள்விக்கு ரிஷப் பண்ட் அளித்த பதில் என்ன ?

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆடு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.

இதனிடையே தற்போது காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ஆடுவீர்களா என செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், " முன்பை விட தற்போது சிறப்பாக இருக்கிறேன். 100 சதவிகிதம் சரியானதை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். விரைவில் அதனை எட்டிவிடுவேன் என நம்புகிறேன்.

நான் திரும்பி களத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் கடினமான ஒரு நேரம். ஆனால் குறைந்தபட்சம் மக்கள் என்னை நேசிக்கிறார்கள் மற்றும் மதிக்கிறார்கள் என்பதைத் தற்போது நான் தெரிந்துக் கொண்டேன். மேலும் மக்கள் என் மீது காட்டிய அளவில்லாத அக்கறையையும் புரிந்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: சில நிமிடங்களில் IPL சாதனையை இழந்த கம்மின்ஸ்.. சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்.. CSK எடுத்த வீரர்கள் யார்?