Sports

இந்தியாவின் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் பேராசையே காரணம் - சுனில் கவாஸ்கர் விமர்சனம் !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தபோது ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா மேக்ஸ்வெல் வீசிய பத்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். எனினும் அடுத்து ஒரு சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரின் அந்த செயல்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இறுதிப்போட்டியில் ரோஹித் மிகவும் பேராசைப் பட்டு ஆட்டமிழந்தார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பவர்பிளே முடியும் முன்னரே ரன் குவிக்க நினைத்த ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். எனினும் அந்த ஓவரில் இன்னும் அதிக ரன்கள் அடிக்கவேண்டும் என்று பேராசைப்பட்டு ஆட்டமிழந்தார்.

முக்கியமான நேரத்தில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மா தன்னை இன்னும் கட்டுப்படுத்தி ஆடி இருக்க வேண்டும். பகுதி நேர பந்துவீச்சாளரான மேக்ஸ்வெல் ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததால், அவரது ஓவரை மற்ற பேட்ஸ்மேன்கள் கவனமாக ஆடத் துவங்கினார்கள். அதனால், இந்தியா குறைந்தது 30 ரன்களை இழந்தது. இந்தியாவின் தோல்விக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

Also Read: மைதானத்தில் மோதிக்கொண்ட அர்ஜென்டின- பிரேசில் ரசிகர்கள் : மோதலைத் தடுக்க களத்தில் குதித்த மெஸ்ஸி !