Sports

"வெளியில் நடந்த சதியே அணியின் தோல்விக்கு காரணம்" - இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கருத்து !

கடந்த 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில்முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதோடு இந்த தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இலங்கை அணியின் தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே காரணம் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் , " உலகக்கோப்பையில் இலங்கை அணியின் மோசமான செயல்பாட்டுக்கு நான் பொறுப்பேர்கிறேன்.வீரர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை . எனினும் இந்த தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே காரணம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் 2 நாட்களில் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "இது உங்கள் ஊரில் நடக்கும் உள்ளூர் தொடர் அல்ல, உலகக்கோப்பை தொடர்" - பாக். முன்னாள் வீரரை விமர்சித்த ஷமி!