Sports

வரலாற்றில் முதல் முறை : Time Out முறையில் ஆட்டமிழந்த இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் - முழு விவரம் என்ன ?

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

இதில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

இதில் நான்காவது விக்கெட்டாக இலங்கை வீரர் சமரவிக்ரமா ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவரின் ஹெல்மெட்டில் ஸ்டிராப்ஸ் சரியில்லாத காரணத்தால் மைதானத்துக்கு வந்து வேறு ஹெல்மெட்டை கேட்டுள்ளார். அதன்படி இலங்கை வீரர் ஒருவர் ஹெல்மெட்டை கொடுத்துள்ளார்.

ஆனால், தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இது குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் புகாரளிக்க விதிப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் என்ற வகையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேத்யூஸ் ஹெல்மெட்டில் உள்ள பிரச்னை குறித்து நடுவரிடம் தெரிவித்தார்.

மேலும், வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் ஹெல்மெட்டின் நிலையை கூறி தனது அப்பீலை திரும்பப் பெற வேண்டுமாறு கேட்டார். ஆனால், அதற்கு ஷாகிப் அல் ஹசன் மறுக்க வேறு வழியின்றி அதிருப்தியுடன் மைதானத்தில் இருந்து ஹெல்மெட்டை கீழே எறிந்தபடி வெளியேறினார். ஐசிசி-யின் விதிப்படி ஒருவர் ஆட்டமிழந்ததும், அவருக்க பதிலாக வரும் வீரர் மூன்று நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அந்த இடைவெளி இந்த உலகக்கோப்பையில் 2 நிமிடமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.சி.சி. விதிகளின் படி மேத்யூஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் வீரராக மேத்யூஸ் மாறியுள்ளார்.

Also Read: கலைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் : இலங்கை அரசு அறிவிப்பு - அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்ன ?