Sports

கலைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் : இலங்கை அரசு அறிவிப்பு - அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்ன ?

கடந்த 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.

பின்னர் இந்தியா நிர்ணயித்த 358 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இறுதியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதுமட்டுமின்றி இந்த உலககோப்பை போட்டியில் இலங்கை அணி இதுவரை தான் ஆடிய 7 போட்டிகளில் 5 தோல்விகளை தழுவி மோசமாக செயல்பட்டு வருகிறது.

அந்த அணியின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு இலங்கை அணி கிரிக்கெட் வாரியத்தின் மோசமான செயல்பாடே காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா அறிவித்துள்ளார்.

எனினும் அந்த அணியின் நிர்வாக பணிகளை கவனிப்பதற்காக, இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழுபேர் கொண்ட இடைக்கால குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் கிரிக்கெட் வாரிய ஊழலை விசாரிக்க மூன்றுபேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அர்ஜுன ரணதுங்கா கடந்த மாதம் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில், வீரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள், நிர்வாகத்தில் இருக்கும் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் ஆகியவற்றால் இலங்கை கிரிக்கெட் வாரியம் தடுமாறிவருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த ஆப்கான் வீரர் - காரணம் என்ன ?