Sports

மைதான ஊழியர்களுக்கு நன்றி.. பாகிஸ்தான் வீரர்களின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி !

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை சர்ச்சை காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இந்தியா வரவிருந்த பாகிஸ்தான் அணிக்கு இறுதிகட்டத்தில் தான் இந்திய அரசால் விசா வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் ஹைதராபாத் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு குறித்து பாகிஸ்தான் வீரர்கள் ரிஸ்வான், ஷதாப் கான், ஷாகின் அப்ரிடி ஆகியோர் சமூக வலைதளத்தில் சிலாகித்து பதிவிட்டிருந்தனர்.

நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை நிர்ணயித்த 345 ரன் இலக்கை சேஸ் செய்து அபார வெற்றிபெற்றது. இந்த போட்டி முடிந்த பின்னர், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அங்கிருந்த மைதான ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு பாகிஸ்தான் ஜெர்சியைப் பரிசாக வழங்கினார். அதன் பின்னர் அவர்களுடன் பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: நாக் அவுட் போட்டியில் இந்தியா தோற்க இந்த வெறிதான் காரணம்- KL ராகுலை குறிப்பிட்டு விமர்சித்த கம்பீர்!