Sports

செஸ் உலகக் கோப்பை தொடர் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.. அவர் படைத்த சாதனை என்ன ?

கடந்த 2019-ம் ஆண்டு மும்பையில் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அப்போது 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

14 வயது வீரர் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 வீரரும் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

பின்னர் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திவரும் பிரக்ஞானந்தா தற்போது செஸ் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகேசி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் பரபரப்பாக சென்ற போட்டியின் இறுதியில் 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் எரிகேசியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.

இதில் முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2.5-3.5 என்ற கணக்கில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கடந்த இருவது ஆண்டுகளில் ஆனந்துக்கு பிறகு இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதிப்போட்டிக்கு உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடவுள்ளார். இந்த தொடரில் உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: தலைமைப்பண்பு குறித்து தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதான் -மனம் திறந்த ருத்துராஜ் கெய்க்வாட் !