Sports

அடுத்தடுத்து அதிரடி: உலகக்கோப்பை தொடரில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு அரையிறுதியை எட்டி பிரக்ஞானந்தா சாதனை

கடந்த 2019-ம் ஆண்டு மும்பையில் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அப்போது 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

14 வயது வீரர் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 வீரரும் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

பின்னர் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திவரும் பிரக்ஞானந்தா தற்போது செஸ் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகேசி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் பரபரப்பாக சென்ற போட்டியின் இறுதியில் 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் எரிகேசியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா. இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின், அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிரக்ஞானந்தா இதே தொடரில் உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல இதே தொடரின் காலிறுதி போட்டியில் கார்சலுடன் மோதிய இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் குகேஷ் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ளவுள்ளார்.

Also Read: "இந்த இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடையாது" - ரவி சாஸ்திரி கூறியது என்ன ?