Sports

”என்னால் முடியாததை இவர் செய்துள்ளார்”.. நடராஜனை பாராட்டிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக்!

தமிழக வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகிச் சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு அணியில் இடம்பிடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இந்த தொடரிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

கிராம பின்னணியில் இருந்து இந்திய அணிவரை உயர்ந்த நடராஜன் தனது சுற்றுவட்டார மக்களுக்காகத் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.

இந்த கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியில் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக், "தமிழ்நாட்டுக்கா விளையாடியபோது தான் முதல் முறையாக நடராஜனை பார்த்தேன். ஐ.பி.எல் போட்டியில் தனது யார்க்கர் பந்துகள் மூலம் இந்திய அணியில் இடம் பெற்றவர்.

இந்திய அணியில் இடம் பெற்றுவிட்டாலும் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவி செய்த அனைவரையும் நினைவில் வைத்துள்ளார் நடராஜன். தன்னை வளர்த்தெடுத்த ஊரில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைந்துள்ளது பெரிய விஷம். இதன் மூலம் தனது சமுதாயத்தை முன்னேறச் செய்கிறார். நடராஜன் போன்ற பலரும் ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிக்கு வரவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது”.. தனது தவறுக்கு காதலியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நெய்மர்!