Politics

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் - உயர்நீதிமன்றம் காட்டம் !

தமிழ்நாட்டில் பிரபல கோயில்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இங்கு அமைந்திருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், திடீரென அதற்கு கோவில் தீட்சிதர்கள் கடந்த ஆண்டு அனுமதி மறுத்தனர்.

ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவதால் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்த நிலையில் அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பக்தர்கள் அனைவரும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஆணை வெளியிட்டிருந்த நிலையில், அதையும் தீட்சிதர்கள் ஏற்காமல் இருந்தனர்.

எனினும் தமிழ்நாடு அரசு தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்றி பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதித்தது. அதனைத் தொடர்ந்தும் பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு விஷயங்களை தீட்சிதர்கள் செய்து வந்தனர். அதனை அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு தீர்த்து வந்தனர்.

இதனிடையே அறநிலையத் துறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தலையிட தடை கோரி தீட்சிதர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீட்சிதர்களை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து பேசிய நீதிபதிகள், "சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல. அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள். மன கஷ்டங்களை போக்க கோவிலுக்கு வரும் மக்கள் அவர்களால் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

நடராஜர் கோவிலில், தீட்சிதர்களால் தனக்கும் பிரச்னை ஏற்பட்டது. கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். பக்தர்கள் வரும் வரை தான் கோவில், அவர்கள் இல்லாவிட்டால் கோவில் பாழாகி விடும்"என்று கருத்து தெரிவித்து பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த மனுவுக்கு அக்.21ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.

Also Read: தமிழ்நாட்டு மக்களின் வெற்றி குறித்து உங்களுக்கு என்ன தெரியும் ? - RN ரவிக்கு கேரளா காங்கிரஸ் பதிலடி !