Politics

ஆளுநர் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து : "ஆளுநரா? ஆரியநரா?" - முதலமைச்சர் கண்டனம் !

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவதாகவும், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்துகொள்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னர் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அதில் " தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி வேண்டும் என்றே திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,

"ஆளுநரா? ஆரியநரா?

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!

சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?

தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்! "என்று கூறியுள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்... CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !