Politics

ஆளுநர் நிகழ்ச்சியில் 'தமிழ்த்தாய் வாழ்த்து" அவமதிப்பு - ஆளுநரை காக்கும் விதமாக மன்னிப்பு கேட்ட DD தமிழ் !

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவதாகவும், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்துகொள்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னர் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அதில் " தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி வேண்டும் என்றே திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் சார்பிலும் ஆளுநர் மற்றும் DD தமிழ் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று DD தமிழ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார்.

கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் 'இந்தி' மாத விழா - கண்டனம் தெரிவித்து மோடிக்கு முதலமைச்சர் கடிதம் !