Politics

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் - விவரம் என்ன ?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவையில் ஆயுள்காலம் டிசம்பர் மாதத்தோடு முடிவடையவுள்ளது. இதன் காரணமாக அந்த இரு மாநிலங்களுக்கும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13-ம் மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13-ம் மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சியையும், ஜார்க்கண்ட்டில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சியையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெள்ளக்காடான மைதானம்... 12 மணி நேரத்தில் தொடங்கிய போட்டி - தமிழ்நாட்டை பாராட்டிய இந்திய வீரர் !