Politics

”சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்” : வயநாடுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜுலை 30 அன்று, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுமார் 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் காணாமல் போயினர்.

இதனால், கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது. வயநாடு நிவாரணத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து, கேரளத்திற்கு உதவிகள் குவிந்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மீட்புப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இந்த பேரிடர் நடந்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனிடையே வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்போது வயநாடு நிலச்சரிவு நிவாரணம், மறு சீரமைப்புக்கு இதுவரை ஒன்றிய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஒன்றிய அரசின் விளக்கத்துக்காக ஒரு வாரம் அவகாசமம் கோரினார்.

அப்போது நீதிபதிகள், ஒன்றிய அரசிடமிருந்து சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். வயநாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “அரியானாவிலும் அரைகுறை வெற்றியே... இதுதான் பா.ஜ.க.வின் ஹாட்ரிக் வெற்றியா?” - முரசொலி தாக்கு !