Politics

தோல்வி பயத்தில் பா.ஜ.க? : தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றுமா!?

பா.ஜ.க.வின் பிரச்சாரங்களில் இடம்பெறும் அறிவிப்புகள், தேர்தலுக்கு பின் புறக்கணிக்கப்படுவதும், அறிவிக்கப்படாத உரிமைப்பறிப்புகள், புல்டோசர் ஆட்சி நடைமுறைப்படுத்துவதும், இயல்பானதாய் மாறியுள்ளது.

அதற்கு, தமிழ்நாட்டில் மீனவர் சிக்கல் ஒழியும், குடிசையில்லா இந்தியா உருவாகும், வங்கிக்கணக்குகளில் பணம் போடப்படும், விலைவாசி குறைக்கப்படும் உள்ளிட்ட பல பொய் பிரச்சாரங்களும், மத நல்லிணக்கத்தை சிதைக்கிற புடோசர் ஆட்சி, மக்களை வஞ்சிக்கிற புதிய சட்டங்கள், கல்வியில் காவி சாயல் பூசுகிற கொள்கைகள், குடியுரிமையைப் பறிக்கும் திருத்தச்சட்டங்கள் உள்ளிட்ட வஞ்சிப்பு நடைமுறைகளும் அமைந்திருக்கின்றன.

அவ்வகையில், பா.ஜ.க.வின் ஆதிக்க அரசியலை நன்கு உணர்ந்த அரியானா மக்களும், ஜம்மு - காஷ்மீர் மக்களும் பா.ஜ.க.வின் தோல்விக்கு, சட்டப்பேரவைத் தேர்தல்களின் வழி பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனால், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பா.ஜ.க, மீண்டும் தனது பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில், 18 வயதுக்கு மேலான பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசம் என்றும், 1 சிலிண்டர் ரூ. 500 என்றும் தெரிவித்துள்ளது.

இதனை அரசியல் கட்சி தலைவர்கள், “விலைவாசி ஏற்றத்திற்கும், சிலிண்டர் விலை வானுயர்ந்து இருப்பதற்கும் காரணமாய் இருப்பவர்களே, தற்போது சலுகைகள் என்று யாரை ஏமாற்றத் துடிக்கிறார்கள்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: கலைஞர் நூற்றாண்டு பூங்கா : நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!