Politics

திசைதிருப்பல்கள் உண்மையாகிவிடாது! - வேலைவாய்ப்பில் பா.ஜ.க முன்னெடுக்கும் அரசியல்!

இந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன், ஒரு குறிப்பிட்ட சர்ச்சை நிகழ்வு பெரிதாவதும், அச்சிக்கல் காலப்போக்கில் காணாமல் போவதும் இயல்பாகி வருகிறது.

அதனடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறிய மனித உரிமை மீறல்கள், உரிமை பறிப்புகள் ஆகியவை வெறும் செய்திகளாகவே மறைந்துவிட்டன. மறைய காலம் எடுக்கும் செய்திகளை, மறைக்க பல்வேறு திசைதிருப்பல்கள் ஒன்றிய பா.ஜ.க அரசால் முடுக்கிவிடப்படுகின்றன.

உதாரணத்திற்கு, மூன்று குற்றவியல் சட்ட மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் பங்களிப்பின்றி நிறைவேற்ற, நாடாளுமன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை முதன்மைப்படுத்தி, அதன் வழி, எதிர்க்கட்சியினரை அவையிலிருந்து வெளியேற்றி சட்டம் இயற்றியது உள்ளிட்ட நடவடிக்கைகளை கூறலாம்.

அவ்வாறு, வேலைவாய்ப்பில் இந்திய மக்கள் அடைந்திருக்கிற பின்னடைவை மூடி, மறைக்கும் வகையில் தற்போது 2021, 2024க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம் என்ற பரப்பலை முன்னெடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

ஆனால், இதில் பகுதி அளவே உண்மை. காரணம், உருவாகியிருக்கிற வேலைவாய்ப்புகள் எவையும், மக்களை பொருளாதார அளவில் முன்னேற்றும் வேலைவாய்ப்புகள் அல்ல.

சில வேலைவாய்ப்புகள் குறைந்த வருமான வேலைவாய்ப்புகள், பல வேலைவாய்ப்புகள் வருமானம் அற்ற வேலைவாய்ப்புகள், சில வேலைவாய்ப்புகள் பகுதி நேர, நிரந்தரமற்ற வேலைவாய்ப்புகள் என்பனவாகவே இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, 8 கோடி என்ற கணக்கு உண்மை இல்லை என்பதை, ஒன்றிய அமைச்சகங்களே உறுதிபடுத்தியுள்ளன. உண்மையில் சுமார் 6 கோடி வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன என ஒன்றிய அமைச்சகங்கள் தெரிவிக்கின்றன. அந்த 6 கோடி வேலைவாய்ப்புகளும், பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட தன்மை கொண்டவையே.

இது போன்ற வேலைவாய்ப்புகள், சமூகத்திற்கு, மக்களுக்கும், மக்களை முதன்மையாகக் கொண்டு இயங்கும் நாட்டிற்கும், எந்த விதத்திலும் வளர்ச்சி தருவதாய் அமையாதது கடும் சர்ச்சையாகி வருகிறது.

Also Read: உயிர்காக்கும் சேவையில் பங்கெடுப்போம் : தேசிய தன்னார்வ இரத்ததான நாளையொட்டி முதலமைச்சர் வாழ்த்து!