Politics

சென்னைக்கு பூஜ்யம் ... மும்பை மெட்ரோவுக்கு 25 ஆயிரம் கோடி... மாநில அரசின் பங்கையும் வழங்கிய ஒன்றிய அரசு !

தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டு சென்னையின் முதற்கட்டப் மெட்ரோ பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், தற்போதுவரை ஒன்றிய அரசு சென்னை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசே முழு செலவையும் ஏற்றுக்கொண்டு மெட்ரோ பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Mumbai metro

இந்த நிலையில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவைக்கு அதிகமான நிதியை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. மும்பையில் 33.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 23 ஆயிரத்து136 கோடியாகும்.

இதில் ஒன்றிய அரசின் பங்கு 16 ஆயிரத்து 662 கோடியாகும். ஆனால் மகாராஷ்டிரா மாநில அரசின் நிதியான 6ஆயிரத்து 474 கோடியையும் சேர்த்து ஒன்றிய அரசே ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு 23 ஆயிரத்து 136 கோடி தேவையான நிலையில் 2 ஆயிரத்து 13 கோடியையும் கூடுதலாக ஒன்றிய அரசு ஒதுக்கியது.

அதன்படி மும்பை 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 25 ஆயிரத்து154 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 1 ரூபாய் கூட ஒதுக்காத ஒன்றிய அரசு, மும்பையில் 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 151சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிக்கும் செயலுக்கு மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது.

Also Read: “ஆர்.என்.ரவி சனாதனக் கருத்து சொல்வதே யூ டியூப் ஸ்டார் ஆவதற்காகத்தான்” - காட்டமாக விமர்சித்த முரசொலி !