Politics

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத் அரசுக்கு எதிரான கருத்துக்களை நீக்க முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி !

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.

பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தது. ஆனால் விடுதலையான குற்றவாளிகளை இனிப்புகள் கொடுத்து பாஜகவை சேர்ந்தவர்களும், இந்துத்வ கும்பலும் வரவேற்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு கண்கலங்கி பேட்டி ஒன்றையும் அளித்தார்.

bilkis bano accused

தொடர்ந்து 11 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில், “பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது. குஜராத் மாநில அரசு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாகத்தான் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது” என கடுமையாக விமர்சித்து 11 பேரின் விடுதலையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பில் குஜராத் அரசுக்கு எதிராக உள்ள கருத்துக்களை நீக்க வேண்டும் என்று குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குஜராத் பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, பிணையில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி! : தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!