Politics

“திருமாவளவனே இதை ஏற்கமாட்டார்!” : ஆதவ் அர்ஜுனா குறித்து ஆ. ராசா பேட்டி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, கொள்கை புரிதல் இன்றி, தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு பிளவு ஏற்படும் வகையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “இடதுசாரி சிந்தனையை தீர்க்கமான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள தமிழ் மொழி வரலாற்று பின்னணியோடு கூடிய அரசியல் புரிதல் உள்ள திருமாவளவன், நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்.

நிச்சயமாக இந்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார். இப்படிப்பட்ட கருத்துக்களை கூறியவர்களை அனுமதிக்க மாட்டார். போதுமான புரிதல் இன்றி வி.சி.க இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார்.

பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கை, மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை, தலித் அரசியலை முன்னெடுத்து, சனாதன தர்மத்திற்கு எதிரான கொள்கைகளை திருமா முழங்குகின்றார். அவர் இந்த கருத்துக்களை ஏற்க மாட்டார், அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தி.மு.க நம்புகிறது.

குறைந்தபட்ச செயல்திட்டம் இரு வேறுபட்ட கொள்கை உடைய கட்சிகள் தேர்தலை சந்திக்கும்போது குறைந்தபட்ச செயல் திட்டம் தேவை. தி.மு.க - பா.ஜ.க உடன் கூட்டணி வைத்த போது குறைந்தபட்ச செயல் திட்டம் கொண்டுவரப்பட்டது. பொது சிவில் சட்டம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கக் கூடாது போன்ற கருத்துக்கள் தி.மு.க.விடம் இருந்தன.

அதற்கு எதிர் மாறான கருத்துள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த போது குறைந்தபட்ச செயல் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அரசியல் முதிர்ச்சியின்மை காரணமாக இந்த கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று. இடதுசாரி சிந்தனை உள்ள அனைவரும் இந்த கூட்டணியில் உள்ளோம்.

இது கொள்கை கூட்டணி இடதுசாரி கொள்கை உடைய கூட்டணி கொள்கை மாறுபாடு யாருக்கும் கிடையாது. சமத்துவம் அரசியல் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை ,சாதி ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி, மொழி, இனம் காப்பது போன்ற அனைத்திலும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் ஓரணியில் உள்ளது.

இடதுசாரி கொள்கையை முழுமையாக ஏற்றுள்ள தி.மு.க கூட்டணிக்கு குறைந்தபட்ச செயல் திட்டம் தேவை என்பது புரியாமை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இதை, திருமா ஒரு காலம் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் இறையாண்மை, சம உரிமை, மக்களாட்சி, மதச்சார்பின்மை ஆகிய நான்கு அடிப்படை பண்புகளை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு தி.மு.க கூட்டணிக்கும் அதனை தலைமை ஏற்றுள்ள முதலமைச்சருக்கும் உள்ளது.

இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது. இதற்கு திருமா சரியான நடவடிக்கை மேற்கொள்வார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பா.ஜ.க.விற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக்கூடிய அளவிற்கு கருத்தை சொல்வதை திருமாவளவன் ஏற்க மாட்டார். விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

வி.சி.க எம்.பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெளிவாக பதிவிட்டிருக்கின்றார் சமூகநீதியில் அக்கறை உள்ள அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் பற்றுள்ள அனைத்து சக்திகளும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்ற கட்சிகள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கேட்கும் நேரத்தில் அவரது கட்சிக்கு எதிராக கருத்து சொல்லி இருக்கின்ற அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

Also Read: “சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!