Politics

”சாதி மூலம் வஞ்சித்து விட்டார்கள், அடையாளத்தை காக்க மாநில சுயாட்சி தான் தீர்வு” - அமைச்சர் மனோ தங்கராஜ் !

சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் "அன்றே பெரியார் எச்சரித்தார், பறிபோகும் மாநில உரிமைகள்" என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “ போரின் மூலம் அடிமைபடுத்துவதற்கும், இந்தியாவில் ஏற்பட்ட அடிமைபடுத்துவதற்கும் வேறுபாடு உள்ளது. போர்களில் பலத்தை பயன்படுத்தி பலவீனத்தால் அடிமைபடுத்துவார்கள். அது வேறு, சித்தாந்தத்தால் சமாதானம் பேசி சாதிகளால் அடிமைபடுத்துவது வேறு. போரின் மூலம் ஏற்படும் அடிமை விட கொடுமையான அசிங்கமான அடிமை தனம் தான் சாதிய அடிமை தனம். அதை நாம் வேரோடு அகற்ற வேண்டும்.

தற்போது தமிழ்நாடு ஆளுநரால் தூங்க முடியவில்லை. சாதி கட்டமைப்பை பற்றி பேசுவது, பெண் விடுதலை, மதசார்பின்மை உள்ளிட்டவற்றை பற்றி பேசினால் கலாச்சார படுகொலை என கடந்த வாரம் ஆளுநர் தெரிவித்தார். சாதி கட்டமைப்பை உருவாக்கி, மக்களை நம்ப வைத்து அவர்களை ஏற்க வைத்தார்கள்.

அன்பால் பழக்கப்படுத்திய கிளி இன சேர்க்கையை கூட மறந்து விடும். நாய் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை பழக்கப்படுத்திவிடுவார்கள். அதுபோல், சாதி கட்டமைப்பை உருவாக்கி மக்களை நம்ப வைத்து கழுத்து அறுத்த செயல் இந்தியாவை தவிர வேறு எங்கும் நடந்ததில்லை.

அண்மையில், சென்னையில் அரசு பள்ளியில் பேசிய‌ ஒருவர் நீங்கள் செய்தது முன் ஜென்ம பாவம் என்று கூறினார். இந்திய‌ ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்ஜென்மத்தில் செய்த பாவத்தால் தான் அவர் மலைவாழ் மக்களில் ஒருவராக பிறந்துள்ளாரா? திராவிட இயக்கம் கூறிய இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை, அனைவருக்குமான கோட்பாடு உள்ளிட்டவை தான் இன்று திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக வைத்துள்ளது. திராவிட இயக்கத்தின் ஈடுபாட்டால் நீங்கள் ஆளுநர் ரவி ஜனாதிபதி முர்மு முன்னால் கை கட்டி சேவை செய்கிறார்.

நாம்‌ பேசுவது இனத்தின் விடுதலை. நம்மை வஞ்சித்து ஏமாற்றி நம் உழைப்பை உறிஞ்சுவிட்டார்கள். அப்போது நம் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனி தமிழ்நாடு வேண்டும் என கூட்டாட்சி தத்துவத்தை பேரறிஞர் அண்ணா கேட்டார். ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று கூறும் நீங்கள், தேசத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.

வெளிநாட்டினருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இந்தி மட்டும் போதாது, ஆங்கிலம் தான் அவசியம். இந்தி மட்டும் தெரிந்து வைத்து கொண்டு வடமாநிலத்திற்கு சென்று வடை சுட முடியுமா ?அவர்களே இங்கு வந்து தொழில் புரியும் நாம் அங்கு சென்று எனன‌ செய்ய முடியும். சனாதனம் பேசும் பலருக்கு தமிழ் மொழியின் மீது பயம் உள்ளது. எல்லாவற்றிலும் அவர்கள் நம் மொழி மீது வெறுப்பு அடைகின்றனர்.

திராவிடம் என்பது ஒரு சாதாரண இயக்கம் அல்ல. எங்கள் தருமம் என்பது கீழே உள்ளவர்களை மேலே தூக்கி விட்டு அவர்களை வளர்ப்பதுதான். ஆனால் உங்கள் தர்மம் என்பது மேலிருக்கும் எங்களை கீழே தள்ளி மிதிப்பது தான். மாநில உரிமை, நம்‌‌ மொழி, நம் இனம் நம் அடையாளம் , அதனை திராவிட இயக்கம் பாதுகாக்க வேண்டும். அதற்கு மாநில சுயாட்சி தான் தீர்வாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Also Read: மருத்துவத் துறையில் ஏராளமான திட்டங்கள் : சாதனை படைக்கும் முதலமைச்சர்... பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !