Politics

இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்களிப்பு தொடக்கம்! : தேர்தல் பணியில் 2.25 இலட்சம் அரசு ஊழியர்கள்!

இலங்கையின் ஒன்பதாவது அதிபரை தேர்வு செய்யும் எட்டாவது அதிபர் தேர்தல் இன்று (செப்டம்பர் 21) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தேர்தலில் 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நீதிக்கு கட்டுப்பட்டு, விடுதலை உணர்வை சிதைக்காத வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 13,421 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தமாக தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3,151 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Also Read: போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி முழங்காலுக்கு கீழ் சுடப்பட்டு கைது : கோவையில் போலீசார் அதிரடி !