Politics

பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக அவதூறு: பாஜக நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!

சென்னை திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு சார்பில் கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இன்று மட்டும் 270 நபர்கள் ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள உள்ளார்கள். திமுக ஆட்சி வந்தவுடன் 2021 ஆம் ஆண்டு அன்றைய ஆணையரின் சுற்றறிக்கையில் திருக்கோயில்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற நெய்களை ஆவின் நிர்வாகத்தில் தான் வாங்க வேண்டும் என்று ஆணையருடைய சுற்றறிக்கை பேரில் அனைத்து திருக்கோவில்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பொய்யான செய்தி வெளியிட்ட பாஜகவை சேர்ந்த செல்வகுமார் மற்றும் வினோத் பி செல்வம் மீது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு வேளை அன்னதானம் நாள் முழுவதும் 750 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 516 திருக்கோவில்களுக்கு ஒன்றிய அரசின் போக் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இயக்கப்பட்டு வரும் கோயில்களுக்கு தான் ஒன்றிய அரசு போக் சான்றிதழ் அதிகமாக வழங்கியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற திட்டம் என்பது 2 ஆயிரம் ஆண்டு கனவு. அதைத்தான் பல்வேறு சிக்கலுக்கு பின் இந்த திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். பணி நியமன ஆணை வழங்கும் முன்பு தடை வாங்க நீதிமன்றம் சென்ற ஒரு கூட்டம் இன்றும் அதை தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட நபர்களை 3 மாதத்திற்கு ஒரு முறை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இருக்கும் சிக்கலை கண்டறிந்து தீர்க்கும் பணியை துறை சார்பில் பேசி வருகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என்கின்ற திட்டத்தின் கீழ் 26 அர்ச்சகர்கள் அனைத்து திருக்கோயிலும் முழு சுதந்திரத்துடன் பணியாற்றி வருகின்றனர். பாஜகவை சேர்ந்த எச். ராஜா பொருத்தவரையில் அவர் குற்றச்சாட்டுகளை சொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம். ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்கின்ற நிலையிலிருந்த அச்சகர்கள் இன்று கை நிறைய வருமானம் வாங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய பொய்யான கருத்துக்களை குறித்து இந்து சமய அறநிலைத்துறை என்றும் அஞ்சாது. மிகவும் தரமான அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதன் காரணத்தால் தான் அனைத்து உலக முருகன் மாநாடு உலக அளவில் பலரும் அறிந்து கொள்ள கூடிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை வந்தவன் பார்ப்பதெல்லாம் மஞ்சள் போல் தெரியும் என்பதை போன்று அவர் இந்த ஆட்சியை கூற வேண்டும் என்று மட்டுமே இதுபோன்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

Also Read: மாநிலக் கட்சிகளை முடக்கவே ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் : தீக்கதிர் தலையங்கம் விமர்சனம் !