Politics

10 ஆண்டுகளுக்குப் பிறகு... ஜம்மு காஷ்மீரில் இன்று தொடங்கியது முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.

அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்.18, 25 மற்றும் அக்.1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி ஒரே அணியாக எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட தேர்தலில் 23 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், காலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய ஆயுதப்படை, துணை ராணுவப்படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Also Read: சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் : போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது சுட்டுக்கொலை !