Politics

31 கோடி குடும்பங்களுக்கு 49 கோடி முத்ரா கடனா? ”இது வடிகட்டிய பொய்”- நிர்மலாவை விமர்சித்த செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் காங்கிரஸ் துவக்க நாள் விழா, இணைய வழி மகளிர் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வை அக்கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று காங்கிரஸ் இயக்கத்தின் மகிளா காங்கிரஸ் தொடக்கப்பட்டு, 40 ஆண்டுகள் நிறைவு பெற்று 41 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 73, 74 அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தம் கொண்டு வந்து பெண்களுக்கு அரசியல் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பை உருவாக்கினர் ராஜீவ் காந்தி அவர்கள்.

ஒவ்வொரு சுதந்திர தின விழாவில் பிரதமர் பெண்களுக்கு பாதுகாப்பு, உரிமைக்காக பேசி கொண்டு வருகிறார், ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்று சூழலை பாஜக உருவாக்கவில்லை, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து இது பிரதமர் பேசவில்லை, அங்கு மக்களை சென்று பார்க்கவில்லை இதை காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் 49.5 கோடி வங்கி கணக்கு உள்ளது, அவற்றில் 29,76 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் 5.9 கோடி மூன்று லட்சம் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20 லட்சம் பேர் 13,180 கோடி ரூபாய் முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது அங்கு இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களை அதிர்ச்சி அளிக்க செய்தது.

கடைசியாக எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 8 கோடி என்றால், 5.6 கோடி பேருக்கு கடன் வழங்கியதாகவும் மேலும் கோவையில் 35 லட்சம் பேர் வசிக்கும் பொழுது அதில் 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் வழங்கியதாகவும் நிர்மலா சீதாராமன் எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் குடும்பங்களின் எண்ணிக்கை 30 கோடி 22 கணக்கெடுப்பின்படி 32 கோடி, தமிழ்நாட்டில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 19 கோடி தான். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 41.43 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள், அவர்களில் 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் வழங்கி இருப்பதாக கூறுவது, இந்தியாவில் 31 கோடி குடும்பங்கள் இருக்கும் நிலையில் 49.5 கோடி முத்ரா கடன் வழங்கியதாக கூறியது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்.

மணிப்பூரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்று சொல்லும் பிரதமர், அவர் ஆட்சிக்கு வந்து பத்தாண்டு நிறைவு பெற்றுவிட்டது, மூன்றாவது முறையும் ஆட்சி செய்து கொண்டு வருகின்றனர், எதற்காக வெளியுறவு கொள்கை கொண்டு வெளிநாட்டு சக்திகளை அவர்களால் தடுக்க முடியவில்லை, இதில் இருந்தே உள்துறையின் தோல்வி ஒப்புக் கொள்கிறார் என்பது தான் அர்த்தம். இது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வங்கதேச மக்கள் ஊடுருவல் விவகாரத்திற்கும் பொருந்தும்” என தெரிவித்தார்.

Also Read: “முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தால் பரபரப்பு !