Politics

“கேள்வி கேட்டால், அவமானப்படுத்துவதா?” : பா.ஜ.க.வின் அடக்குமுறை செயலுக்கு, பிரியங்கா காந்தி கண்டனம்!

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது முதல், பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இன்றியும், பொதுமக்களின் எதிர்ப்புகளை புறக்கணித்தும் நிறைவேற்றி வருகிறது.

அதற்கு, இராணுவத்தில் கொண்டுவரப்பட அக்னிபாத், கல்வியில் கொண்டு வர முற்படுகிற தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) உள்ளிட்ட பல திட்டங்கள் உதாரணங்களாய் அமைந்துள்ளன.

இதனிடையே, ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த GST வரி விதிப்பு அதிகம், அதனை பெற்றுக்கொண்டு மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பில் பாரபட்சம் என ஒன்றிய அரசின் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் கடந்த 7 ஆண்டுகளாக இடைவிடாமல் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், கோவையில் நடந்த நிகழ்வில், அன்னபூர்ணா உணவக குழுத் தலைவர் சீனிவாசன், உணவு வகைகளில் GST-ன் வேறுபட்ட தன்மையை, கேலியாக உணர்த்தினார்.

இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST மீதான குற்றச்சாட்டை ஏற்காமல், சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த காணொளி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டது.

இதற்கு, தேசிய அளவில் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “பா.ஜ.க அரசின் கொடுமையான திட்டங்களால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளன. GST வரிவிதிப்பு சுமையாக மாறியுள்ளது. அதற்காக GST குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேள்வி எழுப்பிய அன்னப்பூர்ணா குழு தலைவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தான் GST குறித்த கேள்விக்கான மோடி அரசின் பதில்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: அன்னப்பூர்ணா விவகாரம் : “ஆணவம்... அவமரியாதை...” - நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்!