Politics

எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் : நிதி பகிர்வை 50 % அதிகரிக்க பினராயி விஜயன் கோரிக்கை!

மாநிலங்களுக்கு நிதி பாகுபாடு, நிதி புறக்கணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 16 வது நிதி கமிஷனுக்கு அறிக்கை வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தை கேரள நிதி அமைச்சர் கே.என் பாலகோபால் அழைப்பு விடுத்த நிலையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா, தெலுங்கானா துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் மல்லு பாட்டி விக்ரமர்கா, பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டைத் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ”நாட்டின் கூட்டாட்சி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் சாசன உரிமைகளை, உரிய நிதியை பெற நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த மாநாடு நமது நாட்டின் நிதி கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனையை நடத்தி பரிந்துரைகளை வழங்கும்” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Also Read: ம.பி.யில் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - பெண் தோழி மீது கூட்டு பாலியல் வன்முறை : ராகுல் காந்தி கண்டனம்!