Politics

செபி தலைவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு - ஒன்றிய பா.ஜ.க அரசு அமைதி காப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!

2014ஆம் ஆண்டு, ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததிலிருந்து பெரும் முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் தள்ளுபடி தருவதும், அதற்கு துணை நிற்பவர்களை பாதுகாப்பதுமே ஒன்றிய அரசின் முதன்மை பணியாக அமைந்துள்ளது.

அவ்வாறு சலுகைகள் பெறுகிற பெரும் முதலாளியாக அதானியும், அம்முதலாளிக்கு துணை நிற்பவராக செபி அமைப்பின் தலைவர் மாதவி புச்சும் விளங்கி வருகின்றனர்.

இவர்கள் மீது, ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனமும், செபி ஊழியர்களும் முறைகேடு குற்றச்சாட்டு வைத்தும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான பணம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலும், இவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காமல் மந்தம் காண்பித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, “செபி தலைவர் மாதவி புச் மீதான முறைகேடு புகார்களுக்கு செபியோ, பிரதமர் மோடியோ ஏன் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை?

ICICI வங்கியிலிருந்து மாதவி புச், ஊதியம் பெற்ற விவகாரத்தில் வங்கியின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

ICICI வங்கி, அகோரா உட்பட 6 நிறுவனங்களில் மாதவி புச் மற்றும் அவரது கணவரும் 90% பங்குகளை வைத்துள்ள விவரங்கள் ஒன்றிய அரசுக்கு தெரியாதா?

விசாரணை அமைப்புகள் மூலமாக செபி தலைவர் மீதான புகார் குறித்து, ஏன் மோடி விசாரணை நடத்தவில்லை?” ஆகிய அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.

எனினும், பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் எவையும், இக்கேள்விகளுக்கு விடை தருவதாக இல்லாதது சர்ச்சையாகி வருகிறது.

Also Read: ‘மணிப்பூரில் அமைதி வேண்டும்!’ : பா.ஜ.க.வின் ஆளுமை தோல்வியை கண்டித்து மாணவர்களும், பெண்களும் பேரணி!